கர்நாடகாவில் இரு பிரிவினரிடையே மோதல்: விநாயகர் சிலை ஊர்வலத்தில் வன்முறையில் ஈடுபட்ட 52 பேர் கைது

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடகாவில் மண்டியா அருகே விநாயகர் ஊர்வலத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. அங்கு 10க்கும் மேற்பட்ட கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியாவில் உள்ள நாகமங்களாவில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நேற்று முன் தினம் மாலை விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்றபோது, பத்ரிகொப்பலு மசூதி அருகே சிலர் கல் வீசிய‌தாக கூறப்படுகிறது. இதனால் அங்கு இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக‌ மாறியது.

இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டதால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த‌னர். 10க்கும் மேற்பட்ட கடைகளும், 7 இரு சக்கர வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. அங்கு மர்ம நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டை வீசியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் தடியடி நடத்தி வன்முறையாளர்களை விரட்டி அடித்தனர்.

நாகமங்களாவில் பதற்றம் ஏற்பட்டதால் அங்கு 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த‌ப்பட்டனர். வன்முறை நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் நேற்று 52 பேரைகைது செய்தனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட மண்டியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திம்மையா, நாகமங்களாவை சுற்றியுள்ள 5 கிமீ தூரத்துக்கு 144 தடைஉத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த உத்தர‌வு அடுத்த48 மணி நேரத்துக்கு அமலில் இருக்கும் என தெரிவித்தார். விநாயகர் சிலை ஊர்வலத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் மண்டியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE