கர்நாடகாவில் விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு, கலவரம்: போலீஸ் குவிப்பு

By செய்திப்பிரிவு

மாண்டியா: கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் உருவானது. இதனால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாண்டியாவின் நாகமங்கல நகர்ப்பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதிக்கு உட்பட்ட பதரிகொப்பாலு பகுதியில் விநாயகர் ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அப்போது பிரதான சாலையை ஊர்வலம் கடந்து சென்றபோது ஊர்வலத்தை நோக்கி கற்கள் வீசப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் விநாயகர் சிலைகளை வைத்துவிட்டு நீதி கேட்டு கோஷங்கள் எழுப்பியுள்ளனர். சிலர் அருகிலிருந்த கடைகளுக்கு தீ வைத்தும், டயர்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து காவல், வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஊர்வலத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றும் மோதல் பெரிதானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியை பதற்றம் நிறைந்ததாக போலீஸார் அறிவித்தனர். அப்பகுதியில் பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா சட்டம் 163 பிரிவின் கீழ் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE