உ.பியில் தண்டவாளத்தில் ரீல்ஸ் படம்பிடித்த போது ரயில் மோதி தம்பதி, 3 வயது மகன் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

லக்கிம்பூர் கேரி: உத்தர பிரதேசம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஷேக் தோலா பகுதியைச் சேர்ந்தவர் முகமது அகமது (26). இவர் தனது மனைவி நஜ்னீன் (24) மற்றும் மூன்று வயது மகன் அப்துல்லாவை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள உமாரியா கிராமத்துக்கு நேற்று காலை சென்றிருக்கிறார்.

அப்போது, முகமது அகமது மற்றும் நஜ்னீன் தங்களது 3 வயது மகனுடன் ரயில் தண்டவாளத்தில் நின்றபடி ரீல்ஸ் காணொலி எடுக்க முயன்றனர். அந்நேரம் எதிரே வேகமாக வந்த பயணிகள் ரயிலை கவனிக்கத் தவறினர். இதனால் ரயில் மோதி மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கேரி நகர போலீஸார், ரீல்ஸ் படம்பிடித்தபோது ரயில்மோதியதால் விபத்து நேர்ந்ததை உறுதி செய்தனர். பிரேத பரிசோதனை உள்ளிட்ட அடுத்தகட்ட விசாரணைக்கு உயிரிழந்தோரின் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE