ராகுல் காந்தி சர்ச்சை கருத்து: சோனியா காந்தி வீடு முன்பு சீக்கியர்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை. குறிப்பாக சீக்கியர்கள் தலைப்பாகை அணிவதற்கே போராட வேண்டி உள்ளது என கூறியிருந்தார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறும்போது, “ராகுல் கருத்து மோசமானது. வெளிநாட்டில் இந்தியாவை பற்றி ஆபத்தான கதைகளை பரப்பி வருகிறார்” என்றார். இந்நிலையில், பாஜக ஆதரவு பெற்ற சீக்கிய குழுவினர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் முன்னாள்தலைவர் சோனியா காந்தியின் வீடு முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சீக்கியர்கள் குறித்த தன்னுடைய கருத்துக்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். காங்கிரஸ் ஆட்சியைவிட பாஜக ஆட்சியில் சீக்கியர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் வசிக்கும் சீக்கியர்களில் ஒரு பிரிவினர் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE