கெவாடியா: குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையில் விரிசல் என சமூக ஊடகத்தில் வதந்தி பரப்பியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சிவாஜி மகராஜ் சிலை சமீபத்தில் உடைந்து விழுந்தது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியால் குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் கெவாடியா நகரில் கடந்த 2018-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையில் (ஒற்றுமை சிலை) விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அது எந்நேரமும் கீழே விழலாம் என ஒருவர் எக்ஸ் தளத்தில் தகவல் வெளியிட்டிருந்தார். சிலை கட்டுமானம் நடந்து கொண்டி ருந்தபோது, எடுக்கப்பட்ட போட்டோவையும் அவர் இணைத்திருந்தார். சுற்றுலா பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் இந்த வதந்தியை பரப்பியுள்ளார்.
பதிவு நீக்கம்: இது குறித்து ஒற்றுமை சிலை அமைந்துள்ள கெவாடியா பகுதி மேம்பாடு மற்றும் சுற்றுலா ஆணையத்தின் துணை ஆட்சியர் அபிஷேக் ரஞ்சன் சின்ஹா புகார் தெரிவித்தார். இதையடுத்து சமூக ஊடகத்தில் வதந்தி பரப்பியதாக அடையாளம் தெரியாத நபர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒற்றுமை சிலை குறித்து வெளியான பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது.