புதுடெல்லி: சிங்கப்பூரை சேந்த பயண வலைப்பதிவர் ஒருவர் இந்தியாவில் தனது பயண அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் டெல்லியில் தவிர்க்க வேண்டிய 3 விஷயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் முதலாவதாக நடு இரவில் டாக்ஸியை அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் தனது நண்பருடன் நள்ளிரவில் வந்திறங்கிய அந்த வலைப்பதிவர் உபேர் டாக்ஸியை 'புக்' செய்யத் தவறியதால் ப்ரீபைடு டாக்ஸி ஒன்றில் பயணித்துள்ளார். அப்போது அதன் டிரைவர் ரூ.200 கூடுதலாக கேட்டபோது, அதைகொடுக்க மறுத்ததால் தவறான இடத்தில் இறக்கி விடப்பட்டுள்ளார்.
இரண்டாவதாக செல்போன் எண்ணை ரிக்ஷா டிரைவரிடம் கொடுக்க வேண்டாம் என வலைப்பதிவர் பரிந்துரை செய்துள்ளார். டெல்லியில் ஜும்மா மசூதிக்கு நண்பருடன் வலைப் பதிவர் பயணம் செய்தபோது இருவரும் தங்கள் செல்போன் எண்ணை ரிக்ஷா டிரைவர் ஒருவரிடம் கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில், அவருக்கு உபேர் கட்டணத்தை விட கிட்டத்தட்ட 2 மடங்கான ரூ.1,000 கொடுப்பது தாராளமானதாக இருக்கும் என அவர்கள் நம்பினர். ஆனால், பயணத்தில் முடிவில் ரூ.6,000 என்ற மூர்க்கத்தனமாக கோரிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக வலைப் பதிவர் கூறியுள்ளார்.
இறுதியாக பணத்துக்கு பதிலாக கிரெடிட் கார்டு மட்டும் கொண்டு செல்ல வேண்டாம் என வலைப்பதிவர் பரிந்துரை செய்துள்ளார். சிறிய கடைகளில் குறிப்பாக தெருவோர கடைகளில் பணம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுவதால் அவர் இந்த யோசனையை கூறியுள்ளார்.
இவரது வீடியோ 20 லட்சம் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. இதில் பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
இதில் ஒருவர், “வெளிநாட்டுப் பயணிகளிடம் அவர்கள் கொள்ளையடிக்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “உங்கள் தொலைபேசி எண்ணை உலகின் எந்த மூலையிலும் கொடுக்கக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும்போது உதவி கோர வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளுக்கு சிலர் அறிவுரை கூறியுள்ளனர்.