இம்பால்: மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் பேசிய ஆடியோ ஒன்று வெளியானதன் காரணமாகவே தற்போது அங்கு மீணடும் கலவரம் மூண்டுள்ளதற்கு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், மணி்ப்பூர் அரசு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் பேசியதாக சர்சைக்குரிய ஆடியோ ஒன்று அண்மையில் வெளியானது. இது, பழங்குடியின சமூகத்துக்கு தனி நிர்வாகம் கோரி மீண்டும் போராட்டங்களை தூண்டியதாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த ஆடியோ சித்தரிக்கப்பட்டவை என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இருப்பினும், பழங்குடியினர் அந்தவிளக்கத்தை ஏற்க மறுத்ததுதான் தற்போதைய கலவரத்துக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
6 பேர் உயிரிழப்பு: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்திசமூகத்தினரிடையே ஓராண்டுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக மணிப்பூரில் அமைதி திரும்பியிருந்த சூழ்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று குக்கி மற்றும் மைத்தேயி பிரிவினரிடையே மீண்டும் வன்முறை வெடித்தது. இதில், 6 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த பதட்டமான சூழலையடுத்து மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் ஆளுநர் எல்.ஆச்சார்யாவை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். தற்போதைய கலவரம் குறித்து மணிப்பூர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (உளவுத்துறை) கே கபீப் கூறுகையில், “ கடந்த வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் சிலர் நீண்ட தூர ராக்கெட்டுகளை வீசிதாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மீண்டும் வன்முறை மூண்டது. இதில், 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
92 இடங்களில் சோதனை சாவடி: வன்முறைக்கு இலக்கான இடங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ராணுவ முகாம்களில் இருந்து ஆயுதங்களை கொள்ளையடிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. 92 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 129நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு கபீப் தெரிவித்தார்.