கர்நாடகாவில் இந்த ஆண்டில் 27 ஆயிரம் பேருக்கு டெங்கு

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மாநில அரசு இதை தொற்று நோயாக அறிவித்துள்ளது. மேலும் கொசுக்கள் உருவாக காரணமாக இருப்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி மாநிலம் முழுவதும் 27 ஆயிரத்து 189 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக பெங்களூரு மாநகரில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 13 பேர்சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறும்போது, ''இதற்கு முன்பு ஒரே ஆண்டில் அதிகபட்சமாக, 24 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை தாண்டிவிட்டது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறோம்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தியுள்ளேன். கொசுக்களை அழிப்பதுடன், சுகாதாரமற்ற இடங்களை அடையாளம் கண்டு, தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். வீடுகளில் சுகாதாரத்தை பேணாதவர்களிடம் அபராதம் விதிக்கும் வகையில் கர்நாடக தொற்று நோய் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்துள்ளோம்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE