போக்குவரத்து விதிமீறல் தொடர்கிறது; அபராத தொகையை எவ்வளவுதான் உயர்த்துவது? - நிதின் கட்கரி வேதனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலக பாதுகாப்பு மாநாடுடெல்லியில் கடந்த 2-ம் தேதிமுதல் 4-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி பங்கேற்று பேசியதாவது:

இந்தியாவில் சாலைகளில் விதிமீறல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. விதிகளைமீறுபவர்களுக்கு எவ்வளவு தான் அபராதம் விதிப்பது? அபராதத் தொகையை அரசுஉயர்த்திக் கொண்டே போகமுடியாது. இதுதான் பிரச்சினை. இந்த சிக்கலுக்கு தீர்வுகாண, சாலைகளைப் பயன்படுத்துவோரின் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

சாலை விதிகளை உறுதியாக அமல்படுத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறோம். விதி மீறுபவர்களுக்கு அபராதத் தொகையையும் அதிகரித்து விட்டோம்.ஆனாலும் எந்த பலனும் ஏற்படவில்லை. இந்த சூழ்நிலையில், வாகன ஓட்டிகளின் நடத்தையில்தான் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அதற்கு சமூக,கல்வி அமைப்புகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கடந்த 2019-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தில்மத்திய அரசு திருத்தங்கள் கொண்டு வந்தது. அதன்படிஅபராதத் தொகை உயர்த்தப்பட்டது. அதன்பிறகும் சாலைவிதிமீறல்கள் அதிகரித்துதான் வருகின்றன. சட்டங்களால் மட்டும் சாலை விபத்துகளில் நேரிடும் உயிரிழப்புகளை தடுக்க முடியாது. வாகன ஓட்டிகளின் மனநிலையில் மாற்றம் வரவேண்டும். பாதுகாப்பாக வாகனங்களை ஓட்ட வேண்டும்.

சலுகையில் தலைகவசம்: இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தலைகவசம்அணியாமல் செல்வதால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. எனவே, இரு சக்கர வாகனஉற்பத்தியாளர்கள், தலைகவசத்தையும் சலுகை விலையில் வழங்க கேட்டுக் கொண்டுள்ளோம். கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் விபத்தில்சிக்கி 50,029 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல இந்திய சாலைகளில் ‘லேன்’ ஒழுங்குமுறையும் இல்லை. பேருந்து மற்றும் டிரக் ஓட்டுநர்கள் சாலைகளில் ‘லேன்’களை ஒழுங்காக கையாண்டால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் தவிர்க்கப்படும். மேலும்,விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வசதிகளை அதிகரிக்க வேண்டியதும் அவசியம். இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE