சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முக ரத்தினத்துடன் பிரதமர் மோடி சந்திப்பு

By செய்திப்பிரிவு

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முக ரத்தினத்துடன் பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முக ரத்தினத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இந்தியா – சிங்கப்பூர் கூட்டாண்மைக்கு தர்மன் அளித்து வரும் உணர்வுபூர்வமான ஆதரவுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர உதவி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த விஷயத்தில், இந்த உறவுகளை விரிவான உத்திசார் கூட்டாண்மையாக உயர்த்துவது, கூட்டு ஒத்துழைப்புக்கான வலுவான முன்னோக்கிய பாதையை வகுக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர். மேம்பட்ட உற்பத்தி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்ற புதிய துறைகளில் இந்தியாவும், சிங்கப்பூரும் தங்களது ஒத்துழைப்பை எவ்வாறு விரிவுபடுத்துவது என்பது குறித்த எண்ணங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். அடுத்த ஆண்டு, இந்தியாவுக்கு வருகை தரும் அதிபர் தர்மனை வரவேற்க ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

சிங்கப்பூர் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்குடன் பிரதமர் சந்திப்பு: சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும், முன்னாள் பிரதமருமான லீ சியன் லூங்கை, பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். பிரதமரை கவுரவிக்கும் வகையில் மூத்த அமைச்சர் மதிய விருந்து அளித்தார். இந்தியா-சிங்கப்பூர் உத்திசார் கூட்டாண்மை வளர்ச்சிக்கு மூத்த அமைச்சர் லீயின் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், மூத்த அமைச்சர் என்ற தனது புதிய பொறுப்பில் இந்தியாவுடனான சிங்கப்பூரின் உறவுகள் குறித்து லீ தொடர்ந்து கவனம் செலுத்த வழிகாட்டுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தங்களது முந்தைய சந்திப்புகளை நினைவுகூர்ந்த பிரதமரும் மூத்த அமைச்சர் லீயும், இந்தியா - சிங்கப்பூர் உறவுகள் விரிவான உத்திசார் கூட்டாண்மையாக முன்னேறி வருவது குறித்து திருப்தி தெரிவித்தனர். இந்தியா - சிங்கப்பூர் அமைச்சர்கள் நிலையிலான வட்டமேஜை மாநாட்டின் போது அடையாளம் காணப்பட்ட ஒத்துழைப்பு அடிப்படையின் கீழ், மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான கணிசமான வாய்ப்புகள் உள்ளன என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் அவர்கள் தங்களது கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE