பொது சிவில் சட்டம் குறித்து 23-வது சட்ட ஆணையம் ஆய்வு செய்யும்: மத்திய அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் சட்ட ஆணையம் இயங்குகிறது. இதன் சார்பில் அவ்வப்போது அமைக்கப்படும் சட்ட ஆணைய குழு, சட்ட சீர்திருத்தங்கள் குறித்துஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைசெய்து வருகிறது. அந்த வகையில் 22-வது சட்ட ஆணையத்தின் பதவி காலம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, கடந்த 1-ம் தேதி 23-வது சட்ட ஆணைய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், இந்தக் குழுவின்ஆய்வு வரம்பில் பொது சிவில் சட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில், “ஏழை மக்களுக்கு எதிராக அல்லது வழக்கத்தில் இல்லாத சட்டங்கள் குறித்து ஆணையம் ஆய்வு செய்துஅவற்றை நீக்குவது குறித்து பரிந்துரை செய்யும். மேலும் மாநில கொள்கையின் நெறிமுறை கோட்பாடுகளின் அடிப்படையில் நடைமுறையில் உள்ள சட்டங்களை சட்ட ஆணையம் ஆய்வு செய்யும். இவற்றை மேம்படுத்துதல் மற்றும் சீர்திருத்தம் செய்வதற்கான வழிவகைகளையும் ஆணையம் பரிந்துரை செய்யும்” என கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை நிறுவ மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும் என அரசியல்சாசனத்தின் 44-வது பிரிவு கூறுகிறது. இது மாநில கொள்கையின் நெறிமுறை கோட்பாடுகளின் ஓர் அங்கம் ஆகும். இதன் அடிப்படையில்தான் மத்திய அரசு மேற்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் தேசியகொடியை ஏற்றி வைத்த பிரதமர்மோடி, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரே மாதிரியான சமுதாய சிவில் சட்டம் அமல்படுத்த வேண் டும் என கூறியிருந்தார். 22-வது சட்ட ஆணையத்தின் தலைவராக நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி பதவி வகித்தார். அப்போது, பொது சிவில் சட்டம் குறித்துபொதுமக்கள் மற்றும் சில அமைப்புகளிடமிருந்து 80 லட்சத்துக்கும் அதிகமான கருத்துகளை பெற்றது.எனினும், அக்குழு இது தொடர்பான அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE