ராகுலுடன் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா சந்திப்பு: ஹரியானா பேரவைத் தேர்தலில் போட்டியா?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தியை மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, வீராங்கனை வினேஷ் போகத் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.

இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீராங்கனையாக இருப்பவர் வினேஷ் போகத். இவர் அண்மையில் நடைபெற்று முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்குமுன்னேறிய நிலையில் 100 கிராம் கூடுதல் எடை இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பின் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். பாரிஸிலிருந்து இந்தியா திரும்பியதும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக நின்றார்.

முன்னதாக கடந்த ஆண்டில் இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் தொல்லை புகார் அளித்தவர் வினேஷ் போகத். இவருக்கு உறுதுணையாக பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் நின்று போராட்டத்தை நடத்தினர். இருவருமே ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஹரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்தான் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை நேற்று காலை நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.

இதன்மூலம் ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் இம்முறை இருவரும் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் தீபக் பபாரியாவிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் பதில் கூறும்போது, இந்தக் கேள்விவியாழக்கிழமை(இன்று) பதில்கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் ராகுல் காந்தியை, வினேஷ், பஜ்ரங் ஆகியோர் சந்தித்துள்ளனர்.

இதனிடையே சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவாதங்களுக்கு இடையே அவர் ராகுல் காந்தியை சந்தித்திருப்பது மேலும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் கிட்டத்தட்ட இவர்கள் காங்கிரஸ் சார்பில்களமிறங்குவது உறுதியாகி யுள்ளது என்று அரசியல் நோக்கர் கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE