ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை தொடரும் என ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை: ஹெலிகாப்டரில் உணவு, மருந்து விநியோகம்

By என். மகேஷ்குமார்

விஜயவாடா: ஆந்திரா, தெலங்கானாவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், 2 மாநிலங்களிலும் பல பகுதிகளில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம்உணவு, மருந்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த 3 நாட்களாக பெய்து வந்த கன மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், ஆந்திராவில் விஜயவாடா நகரத்தை வெள்ளம் சூழ்ந்தது. பிரகாசம் அணையின் மதகு, வெள்ளத்தில் சேதமடைந்ததால் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறியது. கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. செல்போன் டவர்கள் செயலிழந்ததன. பல லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது. விஜயவாடா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் இருளில் மூழ்கின.

ஆந்திராவில் கிருஷ்ணா, பிரகாசம், குண்டூர், விசாகப்பட்டினம், நந்தியால், கோதாவரி மாவட்டங்கள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. படகுகள் மூலம் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரிவளாகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், நேற்றும் ஆந்திராவின்பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தது. மீட்பு, நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.

நேற்று காலை முதல் இன்று அதிகாலை 2 மணி வரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீட்பு குழுவினருடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஆந்திராவில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவித்து அதற்கான நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விஜயவாடா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியபோது, ‘‘கடந்த 5 ஆண்டு ஜெகன் ஆட்சியில் நடந்த அலட்சியப்போக்கும், முரண்பாடான ஆட்சியும்தான் இந்த வெள்ளத்துக்கு காரணம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடைசி நபரை மீட்டெடுத்து, இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை நான் ஆட்சியர் அலுவலகத்தில்தான் இருப்பேன். இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென பிரதமர் மோடியிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்குஹெலிகாப்டர், ட்ரோன் மூலம் உணவு, மருந்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தெலங்கானாவிலும் கன மழை காரணமாக நல்கொண்டா, கம்மம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பேரிடர் மீட்புகுழுவினர் இரவு, பகலாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை தெலங்கானாவில் 18-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் நாசம்: கன மழைக்கு உயிர் சேதத்துடன் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்களும் நாசம் அடைந்துள்ளதால், இதைதேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில், தெலங்கானா அரசு ஊழியர் சங்கத்தினர் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதியாக வழங்க முடிவு செய்தனர். அதன்பேரில் ரூ.100 கோடிக்கான காசோலையை அரசு ஊழியர்கள் சங்க தலைவர் லச்சி ரெட்டி தலைமையில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் வழங்கினர். இதற்கிடையே, மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று ஹைதராபாத் வானிலை ஆராய்ச்சி மையம் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலோர ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளாவின் பல பகுதிகளில் ஓரிரு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.

500-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து: இரு மாநிலங்களில் வெள்ள பாதிப்பு காரணமாக ஏற்கெனவே தென் மத்திய ரயில்வே 496 ரயில்களை முழுவதுமாக ரத்து செய்துள்ளது. 152 ரயில்கள் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை - ஹவுரா மெயில், சென்னை - விசாகப்பட்டினம், விசாகப்பட்டினம் - நான்டெட், விசாகப்பட்டினம் - செகந்திராபாத் வந்தே பாரத் உட்பட மேலும் 28 ரயில்களை ரத்து செய்வதாக தென் மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

உயிரை பணயம் வைத்து..: தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் பிரகாஷ் நகர் பகுதியில் முன்னேரு நதி வெள்ளத்தில் 9 பேர் சிக்கினர். இவர்கள் செல்போன் மூலம் செல்ஃபி வீடியோ எடுத்து தங்களை காப்பாற்றும்படி சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலானது. அவர்கள் சிக்கியுள்ள இடத்துக்கு செல்ல முடியாமல், பேரிடர் மீட்பு படையினரின் ஹெலிகாப்டர் திரும்பியது. அந்த 9 பேரில் ஒரு பெண்ணும் இருந்தார்.அந்த பெண்ணின் தந்தை சுபான்கான், ஜேசிபி வாகனம் இயக்கும் தொழில் செய்து வருபவர். உயிரை பணயம் வைத்து ஜேசிபி வாகனத்தை பயங்கர வெள்ளத்தில் இயக்கி சென்ற அவர், 9 பேரையும் பத்திரமாக காப்பாற்றினார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE