காங்கிரஸ் மேலிட முடிவுக்கு கட்டுப்படுவேன்: முதல்வரை மாற்றும் விவகாரத்தில் சித்தராமையா அறிவிப்பு

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாமீது வழக்குப் போடப்பட்டிருப்பதால் கட்சி மேலிடம் அவரை மாற்றப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு சித்தராமையா, கட்சி மேலிடமும் எம்எல்ஏக்களும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக அறிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது மனைவிபார்வதிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவர் மீது வழ‌க்குப் பதிவு செய்ய அனுமதி அளித்தார். இதனால் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே துணை முதல்வர் டி.கே.சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோர் முதல்வர் பதவியை கைப்பற்ற தங்களின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் நேற்று மைசூருவில் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது: இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பொய் பிரச்சாரம்செய்து வருகின்ற‌னர். என் மீதுஎந்த தவறும் இல்லை. நீதிமன்றத்தின் வாயிலாக நான் உண்மையை நிரூபிப்பேன்.நான் எந்த பொய்யான அறிக்கையும் வெளியிடவில்லை. முதல்வர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டி போடலாம். சிலர் ஊடகங்களில் விருப்பம் தெரிவித்ததை பார்த்தேன். முதல்வரை மாற்றுவது குறித்துஇதுவரை யாரும் பேசவில்லை. கட்சி மேலிடமும் எம்எல்ஏக்களும் யார் முதல்வர் என்பதை தீர்மானிப்பார்கள். இந்த விவகாரத்தில் கட்சிமேலிடமும் எம்எல்ஏக்களும் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களுக்கு மாதம் ரூ.54 லட்சம் செலவு: பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் மாரலிங்க கவுடா மாலி பாட்டீல், ‘‘கர்நாடக‌ முதல்வர் சித்தராமையா தனது சமூக வலைதள பக்கங்களை நிர்வகிக்க மாதம் எவ்வளவு செய்கிறார்? இதுவரை எவ்வளவு செலவு செய்துள்ளார்?'' என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதல்வர் அலுவலகம் அளித்த பதிலில், ‘‘முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களை நிர்வகிக்க மாதத்துக்கு ரூ.53.9 லட்சம் (18 சதவீத ஜிஎஸ்டி வரி உட்பட) செலவு செய்கிறார். ‘‘பாலிசி ஃப்ரண்ட்'' என்ற நிறுவனத்தின் மூலம் 35 பேர் அடங்கிய குழு அவரது சமூக வலைதள கணக்குகளை நிர்வகிக்கிறது. கர்நாடக மாநில மார்க்கெட்டிங் கம்யூனிகேஷன் அண்ட் அட்வர்டைசிங் லிமிடெட் (எம்சிஏ) 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2024-ம் ஆண்டு மார்ச் வரை சமூக வலைதள நிர்வாகத்திற்காக ரூ.3 கோடி செலவழித்துள்ளது'' என பதிலளித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE