இரண்டு நாள் பயணமாக நாளை புரூனை செல்கிறார் பிரதமர் மோடி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: இரண்டு நாள் பயணமாக நாளை (செப்.3) புரூனை தருஸ்ஸலாமுக்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தப் பயணம் இந்தியாவுக்கும் புரூனை தருஸ்ஸலாமுக்கும் இடையிலான அரசுசார் உறவுகள் துவங்கி 40 ஆண்டுகளை குறிக்கும் வகையில் அமையவிருக்கிறது.

இந்தியாவுக்கும் புரூனை தருஸ்ஸலாமுக்கும் இடையிலான அரசுசார் உறவுகள் 10 மே 1984-ல் நிறுவப்பட்டன. நடப்பு ஆண்டு இரு நாடுகளின் அரசுசார் உறவுகளின் 40-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. கலாச்சாரத் தொடர்புகளின் அடிப்படையில் இந்தியாவும் புரூனையும் இணக்கமான மற்றும் நட்பு உறவுகளைப் பேணி வருகின்றன. சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா கடந்த 1992 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணங்களை மேற்கொண்டார். இவர், 2012 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசியான்-இந்தியா நினைவு உச்சி மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

இந்தியாவின் 2018-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்புக்கு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவும் கலந்து கொண்டார். அப்போது அவர், இதர ஆசியத் தலைவர்களுடன் இந்திய அரசு விழாவின் தலைமை விருந்தினராக இருந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் இந்தப் பயணம், நாட்டின் தலைவராக புரூனைக்கு மேற்கொள்ளப்படும் முதல் இருதரப்புப் பயணமாகும்.

பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, எரிசக்தி, விண்வெளி தொழில்நுட்பம், சுகாதாரம், திறன் மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் இரு நாட்டு மக்களிடையே பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவும் புரூனையும் ஒத்துழைத்து வருகின்றன. தற்போது, புரூனையில் சுமார் 14,000 இந்தியர்கள் வாழ்கிறார்கள். புரூனையில் உள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மருத்துவர்களும் ஆசிரியர்களும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இவர்களது பங்களிப்புகள், புரூனையின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் நல்லெண்ணத்தையும் மதிப்பினையும் இந்தியாவுக்குப் பெற்றுத் தருகின்றன.

இந்தியாவின் ‘ஆக்ட் ஈஸ்ட்’ கொள்கையிலும் இந்தோ பசிபிக் தொலைநோக்கிலும் புரூனை ஒரு முக்கியஉறுபு நாடாக உள்ளது. ஜூலை 2012 முதல் ஜூன் 2015-வரை ஆசியான்-இந்தியா உறவுகளின் ஒருங்கிணைப்பாளராக உள்ள புரூனை, ஆசியானுடனான இந்தியாவின் ஈடுபாட்டை அதிகரிப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE