பாஜகவில் ஐக்கியம் ஆனார் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன்!

By செய்திப்பிரிவு

ராஞ்சி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், பாஜகவில் இணைந்தார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் முக்கிய தலைவராகவும், அம்மாநில முன்னாள் முதல்வராகவும் இருந்த சம்பாய் சோரன், இரண்டு நாட்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து, அவர் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி இன்று (ஆக.30) ராஞ்சியில் நடைபெற்றது.

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் முன்னிலையில் சம்பாய் சோரன் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். 67 வயது தலைவரான சம்பாய் சோரன், ஜார்க்கண்ட்டில் அதிக எண்ணிக்கையில் உள்ள பழங்குடியின சமூகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார். பிஹாரில் இருந்து தனி மாநிலமாக ஜார்க்கண்ட் பிரிய காரணமாக இருந்த போராளிகளில் ஒருவர் என்பதால் இவருக்கு 'ஜார்க்கண்ட் புலி' என்ற பட்டப்பெயர் உள்ளது. பழங்குடி சமூகத்துடன் பாஜகவுக்கு இருக்கும் தொடர்பை அதிகரிக்கும் முயற்சியாக சம்பாய் சோரனின் வருகை பார்க்கப்படுகிறது.

பாஜகவில் இணைந்ததன் பின்னணி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து கடந்த ஜூலையில் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்த காரணத்தால் சம்பாய் சோரன் அதிருப்தியில் இருந்தார்.

"முதல்வராக இருக்கும்போது எனக்குத் தெரியாமலேயே நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நான் அவமானப்படுத்தப்பட்டேன். இதனையடுத்து, அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால், மக்கள் ஆதரவு காரணமாக அரசியலில் தொடர முடிவு செய்துள்ளேன்" என சம்பாய் சோரன் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். 81 உறுப்பினர்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE