கொல்கத்தா போராட்டத்தில் போலீஸார் பீய்ச்சியடித்த தண்ணீரின் வேகத்தை தாங்கி நின்ற முதியவர்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்றனர்.

ஹவுரா பாலத்தில் மாணவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார்அவர்களை கலைக்க அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அப்போது மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் காவி உடை அணிந்த முதியவர் ஒருவர் தேசியக்கொடியை அசைத்தவாறு அந்த இடத்தை விட்டு சற்றும் அகலாமல் நின்றிருந்தார். போலீஸார் பீய்ச்சியடித்த தண்ணீரை அவர் தனி ஆளாக நின்று எதிர்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அவரது சமூக ஊடக கணக்குகளில் உள்ள சுயவிவரத்தில் அவரது பெயர் பிரபீர் போஸ் என உள்ளது. என்றாலும் பலராம் போஸ் என்றே அவர் தன்னை அழைத்துக் கொள்கிறார். கடந்த காலத்தில் புகைப்படக் கலைஞராக அவர் பணியாற்றியுள்ளார். அவரது சுயவிவரத்தில் பாஜக மாணவர் அமைப்புடனான தொடர்பை சுட்டிக்காட்டும் மற்றும் மம்தா அரசுக்கு எதிரான சமூக ஊடக பதிவுகள் உள்ளன.

பலராம் போஸ் கூறும்போது, “இந்தப் போராட்டத்தை அறிவித்த மாணவர்கள், ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒருவர் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தனர். எனது குடும்பத்தில் பெண்கள் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படுவதால் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தேன். நான் ஒருசனாதனி. சனாதனியாக இருப்பது குற்றம் என்றால் நான் ஒருகுற்றவாளி. இந்த இந்த இயக்கம் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE