டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் செப்.3 வரை நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வருக்கு எதிராக மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) தொடர்ந்த வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், காணொலி வழியாக கேஜ்ரிவால் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 3-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

முன்னதாக, புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறை வழக்குக்கு எதிராக விசாரணை நீதிமன்றம் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜூன் 20-ம் தேதி ஜாமீன் வழங்கியது. விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ஜூன் 21-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் ரத்து உத்தரவை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் ஜூன் 22-ம் தேதி உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

பின்னர் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவாலை சிபிஐ ஜூன் 26-ம் தேதி கைது செய்தது. அமலாக்கத் துறை தொடர்ந்த பணமோசடி வழக்கில் ஜூலை 11-ம் தேதி உச்ச நீதின்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. சிபிஐ கைது நடவடிக்கையை எதித்தும், ஜாமீன் கோரியும் அரவிந்த் கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.

இதனிடையே, அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை ஆதரித்து பேசிய சிபிஐ, மதுபான கொள்கை வழக்கில் அவரது பங்கு என்ன என்பதை தெரிவிக்காமல் மழுப்பல் மற்றும் ஒத்துழைப்பு தராததால் டெல்லி முதல்வர் காவலில் இருப்பது அவசியம் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE