முதல்வர் மம்தா ராஜினாமா செய்யக் கோரி பேரணி: உளவுத்துறை எச்சரிக்கையால் 6000 போலீஸார் குவிப்பு

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு பொறுப்பேற்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வலியுறுத்தி மாணவர் அமைப்பு அழைப்புவிடுத்துள்ள தலைமைச் செயலகம் நோக்கிய பேரணியில் மிகப்பெரிய வன்முறை நடக்க வாய்ப்புள்ளதாக கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கையை ஒட்டி காவல்துறை அசம்பாவிதங்களைத் தவிர்க்க 6000 போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துகிறது.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த முதுநிலை2-ம் ஆண்டு பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்காக முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன. அதன் ஒரு பகுதியாக மாணவர் அமைப்பு ஒன்று இன்று (செவ்வாய்க் கிழமை) ஹவுராவில் உள்ள மேற்கு வங்க தலைமைச் செயலக அலுவலகம் அமைந்துள்ள நபன்னா நோக்கி பேரணி செல்வதாக அறிவித்துள்ளன. இதனையடுத்து தலைமைச் செயலகம் அமைந்துள்ள வளாகத்தைச் சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் கொல்கத்தா போலீஸாரும், ஹவுரா நகர போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர். 19 இடங்களில் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. 5 முக்கிய இடங்களில் அலுமினியம் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஹவுரா போலீஸ், கொல்கத்தா போலீஸை தாண்டி அதிரடிப் படையினர், பறக்கும் படையினர், அதிவிரைவு படை எனப்படும் (Quick Reaction Team), தண்ணீர் டேங்குகள் என பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகளை கூடுதல் கமிஷனர் அந்தஸ்தில் உள்ள காவல் உயர் அதிகாரி மேற்பார்வை செய்கிறார். ஹாஸ்டிங்ஸ், ஷிப்பூர் சாலை, ஹவுரா மேம்பாலம், ஹூக்ளி மேம்பாலம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, நபன்னா அபிஜான் ('Nabanna Abhijan') பேரணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு காவல்துறை விரிவான இமெயில் அனுப்பியதாக தெரிவித்துள்ளது. அதில் பேரணியில் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள். அவர்களின் பெயர்கள் என்னென்ன? பேரணியில் கலந்து கொள்ளும் முக்கியப் பிரமுகர்கள் யார்? என்றெல்லாம் தகவல் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று (திங்கள்கிழமை) மாலை மேற்கு வங்க போலீஸ், இந்தப் பேரணிக்கு அனுமதியில்லை இது சட்டவிரோதமானது என்று கூறியது. இந்நிலையில் தான் இந்தப் பேரணியில் வன்முறையை ஏற்படுத்த சதி நிலவுவதாக வெளியான உளவுத் துறை தகவல் அளித்ததை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

உளவுத் துறை தகவலின்படி இன்று கொல்கத்தாவில் கல்லூரி சதுக்கத்தில் இருந்து ஒரு பேரணியும், ஹவுராவின் சந்த்ராகச்சியில் இருந்து ஒரு பேரணியும் நடைபெறவிருக்கிறது என போலீஸார் கூறுகின்றனர். இந்தப் பேரணிகள் இன்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்கவிருக்கிறது. கல்லூரி சதுக்கத்திலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்து நபானா 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சந்த்ராங்கச்சியில் இருந்து நபானா 3 கிமீ தூரம். எனவே, இந்த இரு மார்க்கங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

துர்கா பூஜை கமிட்டிகள் எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை விழா இந்த ஆண்டு வரும் அக்டோபர் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தலைநகர் கொல்கத்தா உட்பட முக்கிய நகரங்களில் பிரம்மாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு துர்கா சிலைகள் நிறுவப்பட உள்ளன. விழாவுக்கான பந்தல்களை அமைக்க மேற்கு வங்க அரசு சார்பில் தலா ரூ.85,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து ஹூக்ளி நகர துர்கா பூஜை கமிட்டியின் தலைவர் ரினா தாஸ் கூறியதாவது: கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மாநிலபோலீஸார் முறையாக விசாரணைநடத்தவில்லை. பெண் மருத்துவரின் மரணத்துக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் எங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் மேற்கு வங்க அரசு வழங்கும் நிதியுதவியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். பெரும்பாலான துர்கா பூஜைகமிட்டிகளும் இதே முடிவை எடுத்துள்ளன. இவ்வாறு ரினா தாஸ் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE