நாட்டின் அனைத்து மருத்துவர்களுக்கும் டெல்லி எய்ம்ஸுக்கு இணையான ஊதியம்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: டெல்லி எய்ம்ஸுக்கு இணையான ஊதியத்தை நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளும் இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை விவரங்களை சமர்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) கடந்த ஏப்ரல் மாதம் அறிவுறுத்தியது. இதற்கு வரவேற்பு தெரிவித்த தமிழக அரசு மருத்துவர்கள், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்ட குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை, தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில், ‘சுகாதாரத் துறையில் முன்னணி மாநிலமாக உள்ள தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் பணிச்சுமை, குறைவான ஊதியம் எனதொடர்ந்து கனத்த இதயத்துடனும்,வேதனையுடனும் பணி புரிந்து வருகின்றனர். ஒரே வேலை, ஒரேஊதியம் என்ற கோட்பாட்டின்படி, தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தரப்பட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ்மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வழங்கப்படுவது போலவே, நாடு முழுவதும் உள்ள அனைத்து பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கேட்டபோது, பெருமாள் பிள்ளை கூறியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐஅமல்படுத்தி, அதன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று பலஆண்டுகளாக போராடி வருகிறோம். கோரிக்கையை நிறைவேற்றுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், கோரிக்கை நிறைவேறவில்லை.

இந்த நிலையில், டெல்லி எய்ம்ஸுக்கு இணையாக அனைத்து மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE