‘யுபிஎஸ்’ ஓய்வூதியம் ஏற்பு: முதல் மாநிலமாக மகாராஷ்டிரா அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (யுபிஎஸ்) மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்புகள் வலியுறுத்திய சில மணி நேரங்களுக்குள், நாட்டிலேயே முதல் மாநிலமாக இத்திட்டத்தை ஏற்பதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு மற்றும் அதற்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த 24-ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, பணவீக்கத்தை சரி செய்தல் மற்றும் பிற சலுகைகளுடன், கடைசி 12 மாத சராசரி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு குறையாமல் மத்திய அரசில் பணிபுரிந்தோருக்கு இத்திட்டம் மூலம் குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியமாக கிடைக்கும்.

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்புகள் வலியுறுத்தின. அடுத்த சில மணி நேரங்களுக்குள், நாட்டிலேயே முதல் மாநிலமாக இத்திட்டத்தை ஏற்பதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. எனினும், இந்த விவகாரத்தை கட்சிகள் சுய லாபத்துக்காக அரசியலாக்க வேண்டாம் என்று மத்திய அரசு ஊழியர்களின் உயர்நிலை பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE