கொல்கத்தா மருத்துவர் கொலை | உண்மை கண்டறியும் சோதனையில் சஞ்சய் ராய் கூறியது என்ன?

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் முதல் குற்றவாளியான சஞ்சய் ராயிடம் கடந்த சனிக்கிழமை, உண்மை கண்டறியும் சோதனையை (Polygraph Test) சிபிஐ மேற்கொண்டது. அதில் அவர் தெரிவித்தது என்ன என்பதை பார்ப்போம்.

பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்தது யார்? அவரை கொலை செய்தது யார்? உன்னுடைய இயர் போன் எப்போது உடைந்தது? பெண் மருத்துவரை இதற்கு முன்பு மானபங்கம் செய்தாயா? ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முதல்வர் சந்தீப் கோஷை உனக்கு முன்பே தெரியுமா? என சுமார் 20 கேள்விகள் சஞ்சய் ராயிடம் கேட்கப்பட்டன. அதற்கு அவர் அளித்த பதில்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டன.

கருத்தரங்கு கூடத்தில் தான் நுழைந்த போதே மருத்துவர் கொலை செய்யப்பட்டு இருந்தார் என்ற அதிர்ச்சசி தகவலை சஞ்சய் ராய் சிபிஐ வசம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து அச்சத்தினால் அங்கிருந்து வெளியேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்தில் சஞ்சய் ராயின் இயர் போன் இருந்தது. மேலும், அவர் கருத்தரங்கு கூடத்துக்குள் செல்லும் சிசிடிவி காட்சிகளும் அதனை உறுதி செய்தன. அதன் அடிப்படையில் அவரை மேற்கு வங்க போலீஸார் கைது செய்தனர். முதலில் இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட சஞ்சய் ராய், தற்போது ‘தான் நிரபராதி என்றும், தன்னை இந்த வழக்கில் குற்றவாளியாக்க சதி செய்துள்ளனர்’ என்றும் ‘யு-டர்ன்’ அடித்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE