உலகின் பெரிய பசுமை நெட்வொர்க்: 95 சதவீத இந்திய ரயில் பாதைகள் மின்மயம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய ரயில் பாதைகள் 95% மின்மயமாக்கப்பட்டுள்ளதன் மூலம் உலகின் மிகப்பெரிய பசுமை ரயில்வே நெட்வொர்க் ஆக உருவெடுத்துள்ளது.

அசோசேம் சார்பில் டெல்லியில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இதில், ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினர் முகுல் சரண்மாத்தூர் பேசும்போது, “கடந்த 2023-24 நிதியாண்டில் ரயில்வே கட்டமைப்பை விரிவாக்கம் செய்வதற்காக மத்திய அரசு ரூ.85 ஆயிரம் கோடி ஒதுக்கியது. இந்தியாவில் மொத்தம் 68 ஆயிரம் கி.மீ. ரயில் பாதைகள் உள்ளன. இதில் 95% மின்மயமாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் உலகின் மிகப்பெரிய பசுமைரயில்வே நெட்வொர்க் ஆக இந்திய ரயில்வே உருவெடுத்துள்ளது.

ரயில் பெட்டிகள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக முக்கிய வழித்தடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. தினமும்சுமார் 2 கோடி பேர் ரயிலில் பயணம் செய்கின்றனர்.

டிக்கெட் முன்பதிவை ரத்து செய்வோருக்கு 2 நாட்களுக்குள் ரீபண்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மேம்பாடு மூலம் விபத்துகள் கணிசமாக குறைந்துள்ளது. சில வழித்தடங்களில் அதிவேக ரயில்கள் இயக்கப்படுகின்றன” என்றார்.

அசோசேம் அமைப்பைச் சேர்ந்த தீபக் சர்மா பேசும்போது, “வரும் 2047-ம் ஆண்டுக்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ (விக்சித் பாரத்) என்ற இலக்கைஎட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சீரான, நீடித்த பொருளாதார வளர்ச்சி அவசியம். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரயில்வே துறையை நவீனமயமாக்க வேண்டியது அவசியம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE