பெங்களூரு சிறைக்குள் சுகபோகம் - நடிகர் தர்ஷனின் புகைப்படம் வைரல்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கன்னட நடிகர் தர்ஷன், சிறைக்குள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கும் புகைப்படம் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. நாற்காலியில் அமர்ந்தபடி கையில் காபி மற்றும் சிகரெட் உடன் அந்தப் படத்தில் தர்ஷன் உள்ளார்.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் என 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்தியச் சிறைச்சாலையில் தர்ஷன் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது மேலாளர் மற்றும் இரண்டு சிறைவாசிகளுடன் அவர் அமர்ந்திருக்கும் படம் வெளியாகி உள்ளது. அதில் தனது கையில் காபி மற்றும் சிகரெட்டை அவர் வைத்துள்ளார். அது தற்போது பேசு பொருளாகி உள்ளது.

சிறையில் நடிகர் தர்ஷன்

கொலை வழக்கு குற்றவாளிக்கு சிறையில் இப்படியான வசதிகளா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், சிறை அதிகாரிகளின் உதவியின்றி இது நடக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல் துறை தரப்பில் எந்தவித விளக்கமும் தரப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE