எல்லைப் பகுதியில் வேலி அமைத்த இந்திய படையை தடுத்த வங்கதேச வீரர்களால் பதற்றம்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: இந்திய - வங்கதேச எல்லையில் சில பகுதிகளில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை அன்று, வேலி அமைப்பதற்கு வங்கதேச எல்லை பாதுகாப்புப் படையினர் எதிர்ப்புத் தெரிவித்து தடுத்துள்ளனர். இதனால், இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா கடந்த 5-ம் தேதி இந்தியா தப்பி வந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் கலவரம் தீவிரமடைந்த நிலையில், அங்குள்ள சிறுபான்மையினர் இந்தியாவுக்கு அகதிகளாக நுழையும் முயற்சியில் இறங்கினர்.

இதைத் தடுக்க எல்லையில் இந்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எல்லைப் பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் வேலி அமைக்கும் பணியில் இந்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்ட நிலையில், அதற்கு வங்கதேசப் படையினர் எதிர்ப்பு தெரிவித்து தடுத்துள்ளனர். எனினும் இருதரப்புக்கும் இடையே தாக்குதல் எதுவும் நிகழவில்லை” என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE