கர்நாடக மாநில முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையாவை மாற்றுவது குறித்து காங்கிரஸ் ஆலோசனை

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது நில மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவருக்கு பதிலாக வேறு ஒருவரை முதல்வராக நியமிக்கலாமா என காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மைசூரு மேம்பாட்டு கழகம் கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து சமூக ஆர்வலர்களும் பாஜகவினரும் சித்தராமையா மீது நில மோசடி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க ஆளுநர் அனுமதியளித்தார். இதனை எதிர்த்து சித்தராமையா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்துள்ளது.

இதனிடையே பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர், முதல்வ ர்பதவியை ராஜினாமா செய்யக்கோரி சித்தராமையாவுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர், சித்தராமையாவை மாற்ற வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று முன்தினம் மாலை முதல்வர் சித்தராமையாவையும், துணை முதல்வர் டி.கே.சிவகுமாரையும் டெல்லிக்கு வரவழைத்து இருவரிடமும் ஆலோசனை நடத்தினார். அப்போது மக்களவை எதிர்க்கட்சிதலைவர் ராகுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் சித்தராமையாவிடம் மனைவிக்கு நிலம் ஒதுக்கிய வழக்கு குறித்து விசாரித்தனர். இந்த வழக்கை எவ்வாறு எதிர்கொள்வது? எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை எவ்வாறு சமாளிப்பது? இந்த வழக்கால் கர்நாடக அரசுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதா என சரமாரியாக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதுதவிர காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் கர்நாடக முதல்வராக உள்ள சித்தராமையாவை மாற்றிவிடலாமா அல்லது அவரையே தொடர அனுமதிக்க‌லாமா என தனியாக ஆலோசித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த கூட்டத்துக்கு பின்னர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினோம். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் சித்தராமையாவுக்கு ஆதரவாக இருக்கிறோம். இப்போதைக்கு அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. பாஜகவினர் திட்டமிட்டு புகார்களை கூறி வருகின்றனர். இதையெல்லாம் சட்டப்படி எதிர்கொள்வோம்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE