உ.பி. தனியார் பள்ளியில் பால்கனி சரிந்து விழுந்து 40 மாணவர்கள் காயம்

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் முதல் மாடி பால்கனியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 40 குழந்தைகள் காயமடைந்ததாகவும், அவர்களில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இது குறித்து பராபங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தினேஷ் குமார் சிங் கூறுகையில், "தனியார் நிறுவனத்தின் அவாத் அகாதமி பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. காலை பிரார்த்தனை கூட்டத்துக்காக பெருமளவிலான மாணவர்கள் முதல் மாடி பால்கனியில் கூடியதால் இந்த விபத்துச் சம்பவம் நடந்துள்ளது. காயமடைந்த குழந்தைகளுக்கு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் ஐந்து குழந்தைகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த விபத்துச் சம்பவத்தில் காயமடைந்த 40 குழந்தைகள் உடனடியாக ஜஹாங்கிரபாத் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, அங்கிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சிசிச்சைக்கு அனுப்பப்பட்டனர். பல மாணவர்கள் பால்கனி இடிபாடுகளில் இருந்து வெளியே இழுக்கப்பட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர். மருத்துவமனைகளில் முகம், கழுத்து, கை கால்களில் அடிபட்டு மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE