பெண் டாக்டர் கொலையை எதிர்த்து போராடிய மேற்கு வங்க நடிகைக்கு பாலியல் மிரட்டல்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகை மிமி சக்கரவர்த்திக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் பெரிய அளவில் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மருத்துவர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட திரையுலகைச் சேர்ந்தவர்களும் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நடிகையும் முன்னாள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான மிமி சக்ரவர்த்தியும், இந்த போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தார். டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆதரவாக கருத்துகளும் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் தனக்கு, பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கமான எக்ஸ் பக்கத்தில் மிமி சக்கவர்த்தி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குறித்தும், சமீபகாலமாக மிமி, தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, மிமி சக்கரவர்த்தியின் பதிவுக்கு, பாலியல் ரீதியாகவும், மிரட்டல் விடுக்கும் விதமாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மிமி, தனது எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, “நாங்கள் பெண்களின் உரிமைக்காக நீதி கோருகிறோம். ஆனால், விஷத்தன்மை வாய்ந்த சில ஆண்கள் தங்களின் உண்மை முகத்தை மறைத்துக் கொண்டு, பெண்களுக்கான பாலியல் போராட்டங்களில், பெண்களுக்கு ஆதரவாக நிற்பதுபோல நடிக்கின்றனர்’’ என்று கூறியுள்ளார். மேலும் கொலை மிரட்டல்தொடர்பாக வந்த வாசகங்களையும் அவர் வெளியிட்டுளளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE