கொல்கத்தா: ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனை பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குணால் கோஷ் திங்கள்கிழமை அங்குள்ள உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு சென்றார். பின்னர், தனிப்பட்ட காரணங்களுக்காக சென்றதாக அவர் தெரிவித்தார்.
சிபிஐ அலுவகம் சென்றுவந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குணால் கோஷ், "என்னுடைய தனிப்பட்ட பணிக்காக நான் இங்கு வந்திருக்கிறேன். கொல்கத்தாவில் இருந்த வெளியே செல்வதற்கு முன் ஒரு சில தகவல்களை நான் தெரிவிக்க வேண்டியது இருந்தது. அந்தத் தகவல்களின் பட்டியலுடன் நான் வந்துள்ளேன். அத்துடன் சில ஜூனியர் மருத்துவர்கள் சிபிஐ-க்கு சில தகவல்களைத் தெரிவிக்க விரும்பினர். அவர்களை எவ்வாறு அணுகுவது என்று தெரியாமல் இருந்தனர், எனவே, என்னைத் தொடர்பு கொண்டனர். இந்தத் தகவல்கள் சிபிஐக்கு பயனுள்ளதாக இருந்தால் அவர்கள் (ஜூனியர் மருத்துவர்கள்) ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறார்கள்.
ஆர்.ஜி.கர் மருத்துவர்கள் வழங்கிய அனைத்து ஆவணங்களையும் சிபிஐ வசம் ஒப்படைத்துவிட்டேன். ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு முன்பாக ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டால், கைது செய்யப்பட்டிருப்பவரை அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது நல்லது. இந்த வழங்கில் அவர் மட்டுமே குற்றவாளியா அல்லது வேறு யாரும் இருக்கிறார்களா என்பது ரிமாண்ட் நகலில் தெரிய வரும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் ஆக.9ம் தேதி அம்மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள நெஞ்சகத்துறையின் கருத்தரங்கு அறையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் பல காயங்கள் இருந்ததாக போலீஸார் பின்னர் தெரிவித்தனர். இதனிடைய இந்த கொடூர சம்பவத்தில் முக்கிய சந்தேக நபராக சஞ்சய் ராய் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
» “மருத்துவமனை தாக்குதல் பின்னணியில் திரிணமூல் கட்சியினர்” - பெண் மருத்துவரின் வழக்கறிஞர் சாடல்
» “முதல்வர் மம்தாவை விமர்சிப்பவர்களின் விரல்கள் உடைக்கப்படும்” - மே.வங்க அமைச்சர் சர்ச்சைப் பேச்சு
இந்த வழக்கில் மாநில போலீஸின் நடவடிக்கையில் திருப்தி அடையாத உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த விவகாரத்தை ஞாயிற்றுக்கிழமை தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை எடுத்துக்கொண்டது. வழக்கை நாளை (ஆக.20) உச்ச நீதிமன்றத்தின் மூன்று பேர் அமர்வு விசாரிக்க இருக்கிறது.