பெண் மருத்துவர் கொலை வழக்கில் தவறான தகவல் பரப்பியதாக திரிணமூல் எம்.பி.க்கு போலீஸ் சம்மன்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை குறித்து தவறான தகவலை பரப்பியதாக திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.,யுமான சுகேந்து சேகர் ரேவுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலை வழக்கு தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், இந்த வழக்கு விசாரணையை கொல்கத்தா போலீஸாரிடம் இருந்து எடுத்துக்கொண்ட மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) கடுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அவர் தனது பதிவில், “சிபிஐ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். யாருக்காக எதற்காக தற்கொலை கதை உருவாக்கப்பட்டது என்று மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மற்றும் காவல் ஆய்வாளரை காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும். அந்த அறையின் சுவர்கள் ஏன் இடிக்கப்பட்டன? சஞ்சய் ராய் இவ்வளவு சக்தி வாய்ந்தவராக உருவாக யார் ஆதரவளித்தார்கள்?, சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்கு பின்னர் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டது ஏன்? இவ்வாறு நூறு கேள்விகள் எழுகின்றன. அவர்கள் கட்டாயம் பேச வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, சுகேந்து ரே, குற்றம் நடந்து மூன்று நாட்களுக்கு பின்பே மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டதாக தவறான தகவலைத் தெரிவித்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கொல்கத்தா போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "மூன்று நாட்களுக்கு பின்னர் மோப்ப நாய்கள் அனுப்பப்பட்டன என்ற தகவல் முற்றிலும் தவறானது. ஆக.9 மற்றும் ஆக.12 என இரண்டு முறை மோப்ப நாய்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன. பிஎன்எஸ் பிரிவு 35(1)-ன் கீழ் சுகேந்து ரேவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

என்றாலும் இன்றைய விசாரணைக்கு சுகேந்து ரே ஆஜராகாமல் போகலாம், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே சுகேந்துவின் கருத்துக்கு அவரது சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவரது சகா கட்சிக்காரரான குணால் கோஷ், ரேயின் கருத்து துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “ஆர்.ஜி.கர் மருத்துவமனை சம்பவத்தில் நானும் நீதி வேண்டும் என்பதே எனது கோரிக்கையும். ஆனால் கொல்கத்தா போலீஸார் பற்றிய இந்த கோரிக்கையை நான் கடுமையாக எதிர்க்கிறேன். தகவல் கிடைத்ததும் அவர்களால் முடிந்ததை போலீஸார் சிறப்பாக செய்தனர். தனிப்பட்ட முறையில் கொல்கத்தா போலீஸ் சிறப்பாக செயல்பட்டது நேர்மையான முறையில் விசாரணை செய்தது. எங்களது மூத்த தலைவர் ஒருவரிடம் இருந்து வந்த இதுபோன்ற பதிவு மிகவும் துரதிருஷ்டவசமானது” என்று தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜி.கர் மருத்துவமனை பெண் மருத்துவர் பாலியல்துன்புறுத்தல் மற்றும் கொலை வழக்கை அதன் ஆரம்பக்கட்டத்தில் விசாரித்த செயலுக்காக கொல்கத்தா போலீஸார் கடும் விமர்சனத்தைச் சந்தித்தனர். இந்த வழக்கில் எதிர்பார்த்த அனைத்தும் விஷயங்களையும் செய்து விட்டதாக போலீஸார் கூறினர். என்றாலும் வழக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE