‘போராட்டம் இன்னும் ஓயவில்லை’ - வினேஷ் போகத் உறுதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி திரும்பிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், தனது போராட்டம் இன்னும் ஓயவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரித்திருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. அவர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததன் மூலம் குறைந்த பட்சம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்திருந்தார்.

தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். அதில், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். வெள்ளிப் பதக்கத்தை தனக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக நடுவர் மன்றம் தீர்ப்பு அளிக்காமல் காலம் தாழ்த்தியது. இந்த சூழலில் அவரது மனு கடந்த 14-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் இருந்து வினேஷ் போகத் நாடு திரும்பினார். சனிக்கிழமை அன்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அது உணர்வுப்பூரமானதாக அமைந்தது. “ஒட்டுமொத்த தேசத்துக்கும் இந்நேரத்தில் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் அதிர்ஷ்டசாலி. எனது போராட்டத்தில் என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. அது இன்னும் ஓயவில்லை” என அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE