ராஜஸ்தானின் உதய்பூரில் வன்முறை: பதற்றத்தை தணிக்க இணைய சேவை முடக்கம்

By செய்திப்பிரிவு

உதய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து மக்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இணைய சேவையும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

உதய்பூரில் 10-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் ஒருவரை சக மாணவர் ஒருவர் கத்தியால் குத்தியதில் பாதிக்கப்பட்ட மாணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய மாணவனும், தாக்கப்பட்ட மாணவனும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் சமூக பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நான்கு கார்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. பல வாகனங்கள் கல் வீசி தாக்கப்பட்டுள்ளன. பதற்றம் காரணமாக உதய்ப்பூரின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மக்கள் கூடுவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு ஷாப்பிங் மால் மீது கற்கள் வீசப்பட்டதைத் தொடர்ந்து பல கடைகளின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை அருகே ஏராளமானோர் கூடியதை அடுத்து போலீஸார் அவர்களை கலைத்தனர்.

நடந்தது என்ன? உதய்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவனை சக வகுப்பு மாணவன் ஒருவன் கத்தியால் குத்தி உள்ளான். தாக்கப்பட்ட பட்டியலின மாணவனுக்கு ஆதரவாக பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டதை அடுத்து அது வன்முறையாக மாறியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உதய்பூர் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் போஸ்வால், “காலையில் இரண்டு சிறுவர்களுக்கு இடையே சண்டை நடந்ததாக புகார் வந்தது. இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இரண்டு சிறுவர்களுக்கு இடையே நடந்த சண்டையில் ஒரு சிறுவனின் தொடையில், மற்றொரு சிறுவன் கத்தியால் தாக்கியுள்ளான். காயம் ஆழமாக இருந்தது. சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். சிறுவனைச் சந்தித்தேன். அவனது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. கத்தியால் தாக்கிய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவனது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத ஆயுதம் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE