ராகுலின் குடியுரிமையை பறிக்காதது ஏன்? - டெல்லி உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ராகுல் காந்தியின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்வது தொடர்பாக பாஜக மூத்ததலைவர் சுப்பிரமணியன் சுவாமிடெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2019-ல் ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று சுப்பிரமணியன் சுவாமி மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் கடிதம் அளித்தார்.

அந்த கடிதத்தில், பிரிட்டனில் 2003-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பேக்காப்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக ராகுல் காந்தி இருந்துள்ளார். 2005 அக்டோபர் 10 மற்றும் 2006 அக்டோபர் 31 ஆகிய தேதிகளில் அந்த நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வருடாந்திர அறிக்கையில், ராகுல் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிறகு அந்நிறுவனம் தொடர்பான விவரங்கள் 2009-ல் வெளியிடப்பட்டபோதும் பிரிட்டன் குடியுரிமை பெற்றவராக ராகுல் காந்தியின் பெயர் மீண்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அயல்நாட்டின் குடியுரிமை பெற்ற ஒருவர் இந்திய குடிமகனாக கருதப்படமாட்டார். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றுசுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.

சுப்பிரமணியன் சுவாமி அளித்த புகாரின் பேரில் உள்துறை அமைச்சகம் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அப்போது ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கிடையில், ராகுல்காந்தி இந்திய குடிமகனாக இல்லாத நிலையில் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அமேதியிலும் வயநாட்டிலும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கிறார். எனவே உச்ச நீதிமன்றம் இதில் தலையிட கோரி இரு தனி நபர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏதோ ஒரு நிறுவனம் ஒருவர் பிரிட்டன் குடிமகன் என்று கூறினால் அதற்காக அவரை பிரிட்டன் குடியுரிமை பெற்றவராக கருத முடியாது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த குற்றச்சாட்டு செல்லாது என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் ராகுல் காந்தியின் குடியுரிமையை ரத்து செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்பிரமணியன் சுவாமி சார்பில் அவரது உதவியாளரும் வழக்கறிஞருமான சத்ய சபர்வால் வழக்கு தொடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE