சக பணியாளர்கள் சிலரை சந்தேகிப்பதாக சிபிஐ-யிடம் கொல்கத்தா பெண் மருத்துவரின் பெற்றோர் தகவல்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சக பணியாளர்கள் சிலர் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக சிபிஐ அதிகாரிகளிடம் பயிற்சி மருத்துவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி மருத்துவர் ஒருவர், கடந்த 9ம் தேதி பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வன்கொடுமை கொலை வழக்கு தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை கடந்த 10ம் தேதி மாநில போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை மாநில போலீசார் விசாரித்து வந்த நிலையில், உயிரிழந்த பயிற்சி மருத்துவரின் பெற்றோர் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், கொல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், தங்கள் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் அதே மருத்துவமனையைச் சேர்ந்த சில பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளதாக சிபிஐ அதிகாரி ஒருவர் இன்று (ஆக.16) தெரிவித்துள்ளார். மேலும் அவர், "தங்கள் மகளின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்கு பின்னால் பல நபர்களின் தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாகவும், குறிப்பாக தங்கள் மகளுடன் பணிபுரியும் சில பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் கூறி உள்ளனர். அவர்களின் பெயர்களையும் எங்களுக்கு கொடுத்துள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் பலரை நாங்கள் விசாரிக்க இருக்கிறோம். குறைந்தது 30 பேரை நாங்கள் விசாரணைக்கு அழைத்துள்ளோம். அவர்களில் சிலரிடம் நாங்கள் ஏற்கனவே விசாரணை தொடங்கிவிட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.

24 மணி நேர போராட்டத்துக்கு அழைப்பு: இதனிடையே, மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நாளை (ஆக.17) 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய மருத்துவர்கள் சங்கம், “கொல்கத்தா ஆர்.ஜி. மருத்துவ கல்லூரியில் நடந்த கொடூர குற்றம் மற்றும் சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் ஆகஸ்ட் 17 அன்று காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.

அதே நேரம் அனைத்து விதமான அத்தியாவசிய சேவைகளும் செயல்படும். அவசர நோயாளிகளை மருத்துவர்கள் பார்ப்பார்கள். ஆனால் வழக்கமான வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகள் செயல்படாது மற்றும் அவரசம் இல்லாத அறுவை சிகிச்சைகள் செய்யப்படாது. நவீன மருத்துவர்கள் தங்கள் சேவைகளை வழங்கும் அனைத்து துறைகளிலும் இந்த பணி புறக்கணிப்பு நடைபெறும். மருத்துவர்களின் நியாயமான போராட்டத்துக்கு தேசத்தின் ஆதரவை இந்திய மருத்துவர்கள் சங்கம் கோருகிறது” என்று தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE