குடியரசுத் தலைவர் உரையில் நேரு பெயர் இல்லை என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆற்றிய உரையில் ஜவஹர்லால் நேருவின் பெயர் இடம் பெறாததற்கு காங்கிரஸ் கட்சி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் (பொறுப்பு, தகவல் தொடர்பு) ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளதாவது: 1947 ஆகஸ்ட் 14-ல் ஜவஹர்லால் நேரு மைய மண்டபத்தில் ஆற்றிய உரை காலத்தால் அழியாதது. தேசத்துக்கான அவரது இதயப்பூர்வமான உரை 1947 ஆகஸ்ட் 15-ல் செய்தித்தாள்களில் வெளியானது. சர்தார் படேல், ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர், சியாமா பிரசாத் முகர்ஜி, ஜக ஜீவன் ராம் என மிகப்பெரிய ஆளுமைகள் அடங்கிய அமைச்சரவையை உருவாக்கியவர் நேரு.

இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு புதன்கிழமை இரவு குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையில் சுதந்திரத்துக்காக அரும்பாடுபட்ட பல முக்கிய தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டாலும் 10 ஆண்டுகள் பிரிட்டிஷ் சிறையில் வாடிய இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பெயர் அந்த உரையில் இடம்பெறாதது துரதிர்ஷ்டவசமானது.

நமது வரலாற்றில் இருந்து நேருவின் பெயரை மறைக்கவும், அழிக்கவும் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதிதான் குடியரசுத் தலைவரின் அந்த உரை. அவர்களின் தீய எண்ணம் சுதந்திர தின உரையின் மூலம் தெளிவாக தெரிந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE