நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 நிதி - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நடப்பு ஆண்டு முதல் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 நிதியுதவி வழங்கப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஹைதராபாத் கோல்கொண்டா கோட்டையில் அவர் தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து தனது உரையில் அவர் தெரிவித்தது: “இந்த அரசு மாநில நலன்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அதனைக் கருத்தில் கொண்டு அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும் நல்லுறவை பேணி வருகிறது. ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் அண்மையில் நடந்த பேச்சுவார்த்தையில் மாநில பிரிப்பு சார்ந்து சாதகமான பலன்கள் கிடைக்கும் என அரசு நம்புகிறது.

மக்கள் நலனுக்கு இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தெலங்கானாவை உலக அளவில் பெருமை கொள்ள செய்யும் வகையில் இந்த அரசின் செயல்படும் இருக்கும் என்பது இந்நேரத்தில் நான் உறுதியளிக்கிறேன். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை குறித்து இந்த அரசு அறியும். அவர்களுக்கு இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு ரூ.12,000 நிதியுதவி வழங்கப்படும்.

விவசாயிகளின் நலனை காக்கும் கடமையை இந்த அரசு கொண்டுள்ளது. ரைத்து பரோசா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.15,000 நிதியுதவி விரைவில் வழங்கப்படும். அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தற்போது தயாரிப்பு நிலையில் உள்ளது. அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்” என முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE