இந்தியாவின் மக்கள் தொகை 2036-ல் 152 கோடியாகும்: மத்திய புள்ளியியல் அமைச்சகம் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம், ‘இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் 2023’ என்ற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

வரும் 2036-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 152.2 கோடியாக அதிகரிக்கும். கடந்த 2011-ம் (48.5%) ஆண்டுடன் ஒப்பிடும்போது 2036-ல் (48.8%) ஆண்களுக்கு நிகரான பெண்கள் விகிதம் சற்று அதிகரிக்கும். அதாவது 2011-ல் ஆயிரம் ஆண்களுக்கு 943 ஆக இருந்த பெண்கள் எண்ணிக்கை 2036-ல் 952-ஆக அதிகரிக்கும்.

மேலும் சமீப காலமாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால், 2011-ம்ஆண்டுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 15 வயதுக்குட்பட்டவர்கள் விகிதம் 2036-ல் குறையும். இதற்கு மாறாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் விகிதம் படிப்படியாக அதிகரிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து தகவலை திரட்டி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், பொருளாதார பங்கேற்பு மற்றும் முடிவு எடுத்தல் உள்ளிட்டவற்றில் ஆண்கள் மற்றும் பெண்களின் நிலையை இந்த அறிக்கை பிரதிபலிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE