எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் 16-ம் தேதி ஏவப்படும்: ஒரு நாள் தள்ளி வைத்தது இஸ்ரோ

By செய்திப்பிரிவு

பெங்களூரு: புவி கண்காணிப்புக்காக இஸ்ரோஅதிநவீன இஓஎஸ்-08 செயற்கைக் கோளை உருவாக்கியுள்ளது. இதுஎஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 15-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அது ஆக.16-ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இதன்படி, எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் ஆகஸ்ட் 16-ம்தேதி ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் உள்ளிட்ட தொலையுணர்வு பயன்பாட்டுக்கான செயற்கைக் கோள்கள் இஸ்ரோ சார்பில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது புவி கண்காணிப்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இஓஎஸ்-08, வரும் 16–ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.

ஆயுட்காலம் ஓராண்டு: 176 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், தரையில் இருந்து 475 கி.மீ தொலைவில் உள்ள புவி தாழ்வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இரவிலும் துல்லியமாக படம் எடுக்கக்கூடிய திறன் கொண்டஇந்த செயற்கைக்கோள், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும். இதன் ஆயுட்காலம் ஓராண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE