“வங்கதேசத்தில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது கவலை அளிக்கிறது” - பிரியங்கா காந்தி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தொடர் தாக்குதல்கள் பற்றிய செய்தி கவலையளிக்கிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் பற்றிய செய்தி கவலையளிக்கிறது. மதம், சாதி, மொழி அல்லது அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடு, வன்முறை மற்றும் தாக்குதல்கள் எந்த நாகரீக சமூகத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. வங்கதேசத்தில் நிலைமை விரைவில் இயல்பு நிலைக்கு வரும் என்றும், அங்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், இந்து, கிறிஸ்தவ மற்றும் புத்த மதங்களைப் பின்பற்றும் மக்களுக்கு பாதுகாப்பையும் மரியாதையையும் உறுதி செய்யும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற மாணவர் போராட்டத்தை அடுத்து கடந்த 5ம் தேதி அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவை அடுத்து அங்குள்ள இந்துக்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். கோயில்கள் தாக்கப்பட்டு அவற்றில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இதைக் கண்டித்து வங்கதேசத்தில் இந்துக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் (ஆக.12) வங்கதேசத்தின் பல பகுதிகளில் இந்துக்கள் பெருமளவில் கூடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவின் பல பகுதிகளிலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE