பூஜா கேத்கரை கைது செய்ய ஆக.21 வரை தடை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பூஜா கேத்கரை ஆகஸ்ட் 21 ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், சதியை வெளிக்கொணர பூஜா கேத்கரை ஏன் காவலில் எடுக்க வேண்டும் என்பதற்கு பதில் அளிக்குமாறு டெல்லி காவல்துறை மற்றும் யுபிஎஸ்சிக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் இன்று (அக்.12) தீர்ப்பளித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், “பூஜா கேத்கரை உடனடியாகக் காவலில் வைக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை பார்த்தேன். என்ன குற்றம் நடந்ததோ அதில் இருந்து விசாரணை நீதிமன்றம் தடுமாறிவிட்டது. ஏன் ஜாமீன் வழங்க வேண்டும் அல்லது ஏன் வழங்கக்கூடாது என்பதற்கு பதில் இல்லை.

தற்போதைய நிலையில், அடுத்த விசாரணை தேதி (ஆகஸ்ட் 21) வரை மனுதாரரை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பூஜா கேத்கர், தனக்கு முன்ஜாமீன் மறுத்த மாவட்ட நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்துள்ளது.

நடந்தது என்ன? - கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணிகள் தேர்வில் (யுபிஎஸ்சி) தேர்ச்சி பெற்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர் பூஜா மனோரமா திலீப் கேத்கர். இவர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளானார். பார்வைக் குறைபாடு, மூளை திறன் குறைபாடு ஆகியவை தனக்கு உள்ளதாகக் கூறி மாற்றுத் திறனாளி சான்றிதழ் கோரி அவர் விண்ணப்பித்து இருப்பதாக புகார் எழுந்தது. மேலும் புனேயில் அவர் உதவி ஆட்சியராக இருந்தபோது, பதவியை துஷ்பிரயோகம் செய்து பிறரை மிரட்டியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் பூஜா சிக்கினார். இதைத் தொடர்ந்து, அவர் வாஷிம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அதன்பின், அவர் தொடர்பான முழு விவரங்களை ஆய்வு செய்ய மத்திய பணியாளர் துறையின் கூடுதல் செயலர் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எம்பிபிஎஸ் படிப்பதற்காக 2007-ம் ஆண்டில் அவர் ஓபிசி இடஒதுக்கீட்டைத் தவறாகப் பயன்படுத்தினார் என்பது தெரியவந்தது. மேலும், அவர் மாற்றுத் திறனாளி இல்லை என்று அவர் எம்பிபிஎஸ் படித்த கல்லூரியின் இயக்குநர் தெரிவித்தார். 2007-ம் ஆண்டில் புனேயில் உள்ள காஷிபாய் நவாலே மருத்துவக் கல்லூரியில் பூஜா கேத்கர் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தார். இத்தகைய புகார்கள் காரணமாக பூஜா கேத்கர் மீது மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வழக்குப் பதிவு செய்தது. மேலும், 2022-ம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வுக்கான அவரது விண்ணப்பத்தை ரத்து செய்வதற்கான சோகாஸ் நோட்டீஸையும் (எஸ்சிஎன்) பிறப்பித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE