“ஜக்தீப் தன்கரை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவமதித்தார்கள்” - முன்னாள் பிரதமர் தேவகவுடா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாநிலங்களவையில் அவைத் தலைவர் ஜக்தீப் தன்கரை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவமதித்தார்கள் என்று குற்றம்சாட்டிய முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா, மோடி அரசை சீர்குலைப்பதில் அவர்களால் வெற்றிபெற முடியாது என்று தெரிவித்தார்.

மாநிலங்களவையில் பாஜக எம்பி கான்ஷியாம் திவாரிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில், திவாரிக்கு ஆதரவாக அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த விவகாரம் தொடர்பாக அவையில் பேசிய சமாஜ்வாதி உறுப்பினர் ஜெயா பச்சன், தான் ஒரு நடிகை என்றும், குரல் ஒலிக்கும் விதம் மற்றும் முக பாவங்கள் குறித்து தனக்கு தெரியும் என்றும், ஜக்தீப் தன்கரின் குரல் ஒலிக்கும் விதம் ஏற்கும்படி இல்லை என்றும் குறிப்பிட்டார். இதற்கு தன்கர் பதில் அளித்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அவைத் தலைவர் தன்கருக்கு ஆதரவாக மதச்சார்பற்ற ஜனாதா தளம் எம்பியான முன்னாள் பிரதமர் தேவகவுடா பேசினார். அப்போது அவர், "அவைத் தலைவர் ஜக்தீப் தன்கரை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவ்வாறு அவமதித்தார்கள் என்பதை நான் உன்னிப்பாக கவனித்தேன். இரு தரப்புக்கும் இடையில் பிரச்சினையை சரி செய்ய நீங்கள் (ஜக்தீப் தன்கர்) முயன்றீர்கள். நீங்கள் கூறியதை ஏறக்குறைய ஏற்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இருந்தார். ஆனால், எதிர்க்கட்சி எம்பிக்களில் சிலர், அவரை தூண்டும் விதமாக நடந்து கொண்டார்கள். அவர்கள் யார் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை.

திட்டமிட்டபடி அவை நடவடிக்கைகளை கொண்டு செல்ல நீங்கள் தொடர்ந்து முயன்றீர்கள். தொடர்ந்து வேண்டுகோள் வைத்தீர்கள். ஆனால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஒன்றிரண்டு எம்பிக்கள் தொடர்ந்து பிரச்சினை செய்யும் விதமாக நடந்துகொண்டார்கள். நேற்றும் அப்படித்தான் நடந்துகொண்டார்கள். இதனை அவர்கள் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அமர்ந்திருப்பது மதிப்புமிக்க இருக்கை. ஒவ்வொருவரும் அதனை ஏற்க வேண்டும். ஆனால், நீங்கள் ஒவ்வொரு நாளும் வேண்டுகோள் வைத்தபடி அவையை நடத்துகிறீர்கள். இவ்வாறு நடக்கக் கூடாது. எனக்கு 92 வயதாகிறது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாள்தோறும் நான் கவனிக்கிறேன்

அமளியில் ஈடுபடுவதும், வெளிநடப்பு செய்வதுமாக அவர்கள் (எதிர்க்கட்சிகள்) இருக்கிறார்கள். அவர்கள் அப்படியே செய்துகொள்ளட்டும். அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால், அவர்களின் நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிருக்கும் நாடு அவர்களுக்கு பாடம் புகட்டும். பிரதமராக இருந்த இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தியபோது எத்தகைய நிலை இருந்தது என்பதை அனைவரும் அறிவோம். அவசரநிலை காரணமாக பாதிக்கப்பட்டவன் நான். சிறைவாசம் அனுபவித்திருக்கிறேன்.

எதிர்க்கட்சிகள் இவ்வாறு நடந்து கொள்வது நிற்க வேண்டும். அவைத் தலைவர் ஒவ்வொரு நாளும் வேண்டுகோள் விடுக்கிறார். ஆனால், அவர்கள் காது கொடுத்து கேட்பதே இல்லை. நீங்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுப்பது எனது மனதை தொடுவதாக உள்ளது. எதிர்க்கட்சிகள் எப்படி நடந்து கொள்கின்றன என்பதை நாடு கவனித்துக் கொண்டிருக்கிறது. மூன்றாவது முறையாக அமைந்துள்ள மோடி அரசை சீர்குலைப்பதில் அவர்களால் வெற்றி பெற முடியாது" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE