“ஜக்தீப் தன்கர் மன்னிப்பு கேட்க வேண்டும்” - ஜெயா பச்சன் எம்.பி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினர்களை மரியாதை குறைவாக நடத்தும் அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மன்னிப்பு கோர வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயா பச்சன் வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவமதிக்கப்பட்டதாக காங்கிரஸ் எம்பி ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, இது தொடர்பாக ஜெயா பச்சன் உள்ளிட்டோர் பேசினர். அப்போது அவர்களுக்கு ஜக்தீப் தன்கர் பதில் அளித்தார். இதனால் அவையில் காரசார விவாதம் நடந்தது.

ஒரு கட்டத்தில் ஜெயா பச்சனை நீங்கள் திரைப்பட நடிகையாக இருக்கலாம்; ஆனால்... என பேசினார்.

இதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோபடைந்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய ஜெயா பச்சன், "மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் உறுப்பினர்களை மரியாதை குறைவாகப் பேசுகிறார். அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும் பேசும் விதமும் ஏற்க முடியாதவையாக இருக்கின்றன. நாங்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. பள்ளி மாணவர்களும் அல்ல. எங்களில் பலர் மூத்த குடிமக்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது அவரது மைக்கை அவைத் தலைவர் அணைத்தார். அவர் எவ்வாறு அப்படி செய்யலாம்? எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச அனுமதித்திருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் ஜக்தீப் தன்கர் வரம்பு மீறி பேசுகிறார். அவர் பயன்படுத்தும் வார்த்தைகளை பொதுவெளியில் சொல்ல முடியாது. சில நேரங்களில் உங்களால் தொல்லையாக இருக்கிறது எனக் கூறுகிறார். உங்களுக்கு புத்தி குறைபாடு உள்ளது என்கிறார்.

நீங்கள் திரைப்பட பிரபலமாக இருக்கலாம்; அதுபற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என என்னைப் பார்த்து ஜக்தீப் தன்கர் கூறினார். நான் 5வது முறை நாடாளுமன்ற உறுப்பினர். நான் என்ன சொல்கிறேன் என்பது எனக்குத் தெரியும். தற்போதெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசப்படும் முறை முன்பு இல்லாதது. என்னைப் பற்றி ஆட்சேபனைக்கு உரிய விதத்தில் பேசியதற்காக ஜக்தீப் தன்கர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE