‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி இயக்கத்தை’ மக்கள் இயக்கமாக மாற்றுவோம்: பிரதமர் மோடி அழைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி’ இயக்கத்தை மறக்கமுடியாத மக்கள் இயக்கமாக மாற்றுவோம் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி’ இயக்கத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. மக்கள் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் சுயவிவரப் பட பகுதியில் மூர்வணக் கொடி படத்தை வைப்பதையும், தங்கள் வீடுகள், தெருக்களில் மூர்வணக்கொடியை ஏற்றுவதையும் இந்த இயக்கம் ஊக்குவிக்கிறது.

இந்நிலையில், சமூக ஊடக தளங்களில் மூவர்ணக் கொடியுடன் கூடிய தங்களது சுயவிவரப் படத்தை (profile picture) மாற்றுமாறு குடிமக்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு திரு மோடி தனது சுயவிவரப் படத்தை மூவர்ணக் கொடியாக மாற்றினார்.

‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி’ இயக்கத்தை மறக்கமுடியாத மக்கள் இயக்கமாக மாற்ற ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: “இந்த ஆண்டு சுதந்திர தினம் நெருங்கும் நிலையில், ‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி #HarGharTiranga இயக்கத்தை மீண்டும் ஒரு மறக்கமுடியாத வெகுஜன இயக்கமாக மாற்றுவோம். நான் எனது சுயவிவரப் படத்தை மாற்றி வருகிறேன். நமது மூவர்ணக் கொடியைக் கொண்டாடுவதில் என்னுடன் இணையுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் சுயபடங்களை harghartiranga.com இல் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்டோர் தங்கள் profile picture-களை மாற்றி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE