அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைப்பதாக கடந்த 6-ம் தேதி நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நீதிபதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தங்கள் தீர்ப்பை வழங்கினர். அதில், அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளிலும் மணிஷ் சிசோடியாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உத்தரவாதத் தொகையாக ரூ. 10 லட்சம் கட்ட வேண்டும்; அவர் தனது பாஸ்போர்ட்டை காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்; ஒவ்வொரு திங்கட்கிழமையும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்; சாட்சியங்களை கலைக்கக்கூடாது எனும் நிபந்தனைகளின் அடிப்படையில் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை முறையாக பின்பற்றுகிறீர்களா என்பது கணக்கில் கொள்ளப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ம் தேதி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்து. அதே ஆண்டு மார்ச் 9 ம் தேதி அவரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்க இயக்குநரகம் (ED) கைது செய்தது. இதன் காரணமாக மணிஷ் சிசோடியா சுமார் 17 மாதங்களாக சிறையில் உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE