மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நலக்குறைவால் இன்று (ஆகஸ்ட் 8) காலமானார். அவருக்கு வயது 80.

மூத்த இடதுசாரி தலைவரும் மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா கடந்த சில காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சுவாசக் கோளாறு காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஆண்டு, அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, உயிர்காக்கும் மருத்துவக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையில் உடல்நலம் தேறி மீண்டு வந்தார். தொடர்ந்து அவரது உடல்நலம் சீராக இருப்பதாக சொல்லப்பட்டுவந்த நிலையில், இன்று காலை தெற்கு கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். இதையடுத்து அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு மீரா என்ற மனைவியும், சுசேதன் என்ற மகனும் உள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட அமைப்பான பொலிட்பீரோவில் அங்கம் வகித்த புத்ததேவ் பட்டாச்சார்யா, 2000 முதல் 2011 வரை மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்தார். அதிக முறை முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் ஜோதி பாசுவுக்குப் பிறகு முதல்வர் பதவிக்கு வந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. இவர் சிபிஎம் கட்சியை வழிநடத்திய சமயத்தில்தான் 2011ல் 34 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மேற்குவங்கத்தில் அரியணை ஏறியது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ்.

கொல்கத்தாவில் புகழ்பெற்ற பிரசிடென்சி கல்லூரியின் முன்னாள் மாணவரான பட்டாச்சார்யா முழுநேர அரசியலில் ஈடுபடும் முன் பள்ளி ஆசிரியராக இருந்தவர். எம்எல்ஏ, அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்த இவர், 2000-ம் ஆண்டு ஜோதி பாசு பதவி விலகுவதற்கு முன் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதன்பின் மேற்குவங்கத்தில் நடந்த 2001 மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தல்களில் சிபிஎம் கட்சியை வழிநடத்தியது இவரே.

இதன்பின் இவரது ஆட்சிக்காலத்தில் மேற்குவங்கத்தில் சிங்கூர் மற்றும் நந்திகிராம் ஆகிய இடங்களில் தனியார் ஆலைகள் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தன. இதுதொடர்பான போராட்டத்தை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் தீவிரப்படுத்த அந்த போராட்டங்களே, 34 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியை மேற்குவங்கத்தில் அகற்ற வழிவகுத்தது.

இரங்கல்: முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “புத்ததேவ் பட்டாச்சார்யா உடன் பல தசாப்தங்களாக தொடர்பில் உள்ளேன். அவரின் இறப்புச் செய்தியால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். அவரின் மனைவி, மகன் மற்றும் சிபிஎம் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது இரங்கல்கள்.” என்று தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE