2024 ஜூலை வரை பொதுமக்களின் 13.75 லட்சம் புகார்களுக்கு தீர்வு: மத்திய அரசு தகவல்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மத்திய அரசிடம் 2024-ல் ஜூலை மாதம் வரை வந்த பொதுமக்களின் 14.41 லட்சம் புகார்களில் 13.75 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரதமர் அலுவலகத் துறையின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாளும் மத்திய அரசுக்கு பல்வேறு வகையான புகார்கள் நாடு முழுவதுமிருந்து அனுப்பப்படுகிறது. இதன் மீதான ஒரு கேள்வி புதன்கிழமை (ஆக.07) நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய பிரதமர் அலுவலகத் துறையின் இணை அமைச்சரான டாக்டர்.ஜிதேந்திர சிங் பதிலளித்தார்.

இது குறித்து மத்திய இணை அமைச்சரான ஜிதேந்திர சிங் அளித்த பதிலில், “பொதுமக்களிடமிருந்து மத்திய அரசுக்கு இந்த ஆண்டு ஜூலை 31 வரை மொத்தம் 7 மாதங்களில் 14,41,416 புகார்கள் கிடைத்தன. இவற்றில் 71,177 புகார்கள் ஏற்கெனவே நிலுவையில் இருந்தன. மொத்தம் இருந்த 14,41,416 புகார்களில் 13,75,356 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு பதில்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த புகார்களில் 66,060 புகார்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

நம் நாட்டின் பொதுமக்கள் அனைவரும் மத்திய அரசுக்கு தங்கள் புகார்களை அனுப்பலாம். இவற்றை ’மையப்படுத்தப்பட்ட பொதுக்குறைகள் தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு மையம் (சிபிஜிஆர்எம்எஸ்)’ எனும் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

புகார்கள் மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் அலுவலகங்கள் குறித்ததாக இருக்க வேண்டும். இந்த புகார்களின் மீதான தீர்வு மத்திய அரசின் கால் சென்டர்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. இவை, இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 10 பிராந்திய மொழிகளிலும் செயல்படுகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE