1975-ம் ஆண்டில் ஹசீனாவுக்கு அடைக்கலம் அளித்த இந்திரா காந்தி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம்தேதி அப்போதைய வங்கதேச அதிபர் முஜிபுர் ரகுமானுக்கு எதிராகசில ராணுவ தளபதிகள் சதி செய்தனர். தலைநகர் டாக்காவில் உள்ள அதிபரின் வீட்டில் நுழைந்த ராணுவ தளபதிகள், அதிபர் முஜிபுர் ரகுமானை சுட்டுக் கொன்றனர். அவரது மனைவி, 3 மகன்கள், 2 மருமகள்கள் மற்றும் உறவினர்கள், பாதுகாவலர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த படுகொலையில் முஜிபுர் ரகுமானின் மூத்த மகள் ஷேக் ஹசீனாவும் அவரது தங்கை ரெகானாவும் உயிர் தப்பினர். அப்போது ஹசீனாவின் கணவர் வாஸ்த் மியா ஜெர்மனியில் வசித்து வந்தார். வங்கதேசத்தில் இருந்து ஹசீனாவும் ரெகானாவும் ஜெர்மனிக்கு தப்பிச் சென்றனர். அங்கேயும் அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் நீடித்தது.

அந்த இக்கட்டான நேரத்தில் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி, ஹசீனாவுக்கு அடைக்கலம் அளித்தார். ஜெர்மனியில் இருந்து டெல்லி வந்த ஹசீனா குடும்பத்தினர் அங்குள்ள பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஹசீனாவோடு அவரது மகன், மகளும் டெல்லியில் தங்கியிருந்தனர்.

இந்திரா காந்தியின் குடும்பம், வங்கதேசத்தை சேர்ந்த பிரணாப் முகர்ஜியின் குடும்பத்தோடு ஹசீனா நெருங்கி பழகினார். பிரணாப் முகர்ஜியின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே அவர் பாவிக்கப்பட்டார்.

6 ஆண்டுகளுக்கு பிறகு.. சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 1981-ம் ஆண்டு மே 17-ம் தேதி ஹசீனா மீண்டும் வங்கதேசம் சென்றார். அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 2009-ம் ஆண்டில் வங்கதேச பிரதமராக பதவியேற்றார். தொடர்ந்து 15ஆண்டு வங்கதேசத்தை ஆட்சிசெய்த அவருக்கு எதிராக தற்போது கலவரம் வெடித்துள்ளது. இதன் காரணமாக அவர் மீண்டும் இந்தியாவில் தஞ்சமடைந் துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE