ஆபத்தான அறைகள், கொள்ளை கட்டணங்கள்: டெல்லி குடிமைப் பணி பயிற்சி மாணவர்களின் அவல நிலை

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: டெல்லியில் குடிமைப் பணி உள்ளிட்ட தேர்வுகளின் பயிற்சிக்கு தயாராகும் மாணவர்களை குறிவைத்து ஆபத்தான நிலையில் உள்ள தங்கும் அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. இதில் தங்கி பயிற்சிக்கு தயாராகும் அவல நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது.

டெல்லியில் இயங்கிவரும் தனியார் ஐஏஎஸ் தேர்வுப் பயிற்சி மையத்தில், ஜூலை 27 அன்று மழை வெள்ளம் புகுந்ததில் மூன்று இளம் பட்டதாரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்து நாட்டின் தலைநகரில் தங்கி பயிலும் மாணவர்கள் சந்திக்கும் பல்வேறு அவல நிலை குறித்து தகவல் வந்தவண்ணம் உள்ளன. இந்த புகார்கள் குறித்து டெல்லியில் மாணவர்கள் தங்கி பயிற்சி பெறும் பகுதிகளில் விசாரித்தால் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கின்றன.

தங்கும் அறைகள்... - டெல்லியில் கரோல் பாக், ராஜேந்தர் நகர், பட்டேல் நகர் ஆகியவை பழமையான பகுதிகள். இந்த பகுதிகளில் மாணவர்களுக்கான தங்கும் அறைகளின் வாடகைகள் மிகவும் அதிகம். இவை மட்டுமல்ல, ஷாலிமார் பாக், முகர்ஜி நகர், நிரங்காரி காலனி, காந்தி விஹார், சந்த் நகர், நேரு விஹார், பரமாணந்த் நகர் எனப் பட்டியல் நீள்கிறது.

இப்பகுதிகளில் தங்கியுள்ளவர்களது கூற்றுகளின்படி, மாணவர்களிடம் மாத வாடகையாக ரூ.15,000 முதல் 30,000 வரை வசூல் செய்யப்படுகிறது. இதில் ஏசி பொருத்த கூடுதல் கட்டணம், அதற்கான மின்சாரக் கட்டணமும் தனியாக வசூல் செய்யப்படுகிறது. ஆனால், இந்த அறைகள் மாணவர்கள் தங்கள் கால்களைக் கூட வசதியாக நீட்டிப் படுக்க முடியாத அளவிலேயே உள்ளன. பல சமயம் இந்த அறைகளில் இரண்டு பேர்களுக்கு மேல் தங்க வைப்பதும் உண்டு.

இத்துடன் அறையில் நடக்க முடியாத இடுக்கின் ஒரு ஓரத்தில் சுவற்றுடன் ஒட்டியபடி ஒரு பலகை தொங்க விடப்படுகிறது. இதை படிக்கும்போது மேசை போல் மாட்டி மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த அறைகள் பெரும்பாலும் கட்டிடங்களின் அறைகளிலிருந்து தனியாகப் பிரித்து அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் இது பிளைவுட் பலகைகளான அறைகளாக உள்ளன. இவற்றில் காற்று வசதிக்கான ஜன்னல்கள், விபத்துக்களிலிருந்து தப்பும் அவசர கதவுகள் என்பதோ சுத்தமாக கிடையாது.

மேலும், மாணவர்களது ஒவ்வொரு அறைகளுக்கும் தனியாக துணை மின்சார மீட்டர் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 100 மீட்டர் வரையிலான மின்சாரத்துக்கு கட்டணங்கள் கிடையாது. இதற்கான பலனும் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. ஏனென்றால் அறைகளின் அளவுகளுக்கு ஏற்றவகையில் வீடு மின்சாரத்துக்கான கட்டணம் வசூலிக்காமல் வணிக மின்சாரத்துக்கான கட்டணங்கள் உரிமையாளர்களால் வசூலிக்கப்படுகின்றன. ஆனால், உரிமையாளர்கள் மாணவர்களிடம் வசூலிக்கும் வணிக மின்சார கட்டணத்தை டெல்லி அரசுக்கு செலுத்துவதில்லை என்றும் புகார்கள் உள்ளன.

மேலும், இந்த அறைகளில் பெரும்பாலான மின்சார வயர்கள் பாதுகாப்பான முறைகளில் அமைக்கப்படுவதில்லை. இவை ஒரு அவசரத்திற்காகவும், தற்காலிக பயனுக்கானது என்று தவறான முறையில் அமைக்கப்படுகின்றன. இதனால், மாணவர்கள் மீது மின்சாரம் பாயும் ஆபத்துக்களும் நிறைய உண்டு.

இந்த அறைகள் அமைந்துள்ள பங்களாக்களும், கட்டிடங்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வரைபடங்கள் டெல்லி அரசால் அனுமதிக்கப்பட்டவை அல்ல. எனினும், இவற்றின் அவலநிலை குறித்து டெல்லி அரசு அதிகாரிகள் இதுவரையும் சோதனையிட வந்ததில்லை என குமுறுகிறார்கள் மாணவர்கள். இதற்காக அந்த அதிகாரிகள் உள்ளிட்ட ஒரு குறிப்பிட்ட கூட்டத்துக்கு மாதம் ஒரு தொகை லஞ்சமாகவும் அளிக்கப்படுவதாகப் புகார்கள் கூறப்படுகின்றன.

இந்த தங்கும் அறைகளை தரகர்கள் மூலமாகவே வாடகைக்கு எடுக்க முடியும். இதற்காக, தரகர்களுக்கு ஒன்று முதல் இரண்டு மாத வாடகை கட்டணத்தை பங்காக தர வேண்டிய நிலை உள்ளது. நேரடியாக வரும் மாணவர்களுக்கு கட்டிட உரிமையாளர்கள் பெரும்பாலும் அறைகள் அளிப்பது இல்லை. இதன் காரணமாக, சட்டத்துக்கு புறம்பாக பல தரகர்கள் டெல்லியில் இதற்காகவே தனியாக அலுவலகம் அமைத்து அமர்ந்துள்ளனர்.

மாத வாடகைக்கான இந்த அறைகள், சில சமயம் அருகருகே உள்ள இரண்டு அல்லது மூன்று கட்டிடங்கள் ஒன்றாகியும் அமைக்கப்படுகின்றன. இவற்றை பி.ஜி அறைகளின் மாஃபியாக்கள் கட்டிட உரிமையாளர்களிடம் பேசி குத்தகைக்கு எடுக்கிறார்கள். இந்த மாஃபியாக்களின் பணியாளர்கள் பலசமயம் அப்பாவி மாணவி, மாணவர்களிடம் குண்டர்கள் போல் செயல்படுவதும் உண்டு.

இதுபோன்ற பயிற்சி மாணவர்கள் தங்கள் அறைகளில் சமைப்பதில்லை. இவர்கள் தங்கியுள்ள கட்டிடங்களின் மேல்தளங்களில் பொது சமையலறை அமைத்து உணவு விநியோகிக்கப்படுகிறது. இதிலும், பல விதிமீறல் புகார்கள் உள்ளன. இந்த உணவுகள் பலசமயம் உண்ணும் அளவுக்கு சுவையாக இருப்பதில்லை. இருப்பினும், இதற்கானத் தொகையை அந்த மாணவர்கள் கட்டாயத்தின் பேரில் அளித்துவிட்டு, வெளியில் சாப்பிடும் நிலையும் உள்ளது.

ஒவ்வொரு வருடமும் புதிதாக சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக வரும் மாணவர்கள் இடையே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம். பயிற்சி நிலையங்களில் பழமையான பகுதியாக கரோல் பாக் உள்ளது. முதன்முதலில் மாணவர்களுக்காக துவக்கப்பட்ட இதன் பயிற்சி நிலையங்கள், இடப்பாற்றாக்குறைக்கு உள்ளாகின. இதனால், டெல்லிக்கு வெளியே அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தின் நொய்டாவுக்கு செல்ல முடிவு செய்தனர்.

சுமார் 15 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த முடிவுவால் கரோல் பாக் பகுதியின் கட்டிட உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் பின் தங்களுக்கு சம்பாத்தியம் இருக்காது என அஞ்சி, பயிற்சி நிலையங்களின் உரிமையாளர்களிடம் பேசி கட்டாயப்படுத்தி நெய்டாவுக்கு மாறும் திட்டத்தை முடக்கி விட்டதாகப் புகார் உள்ளது. இதற்கு வேறுவழியின்றி பயிற்சி நிலைய உரிமையாளர்களும் சம்மதித்து அதே பகுதியில் இருக்கும் நிலை தொடர்கிறது. இவற்றுடன் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களின் பிரபல பயிற்சி நிலையங்களும் தங்கள் கிளைகளை டெல்லியில் துவக்கி வருகின்றன.

இந்த அறைகளில் தங்கும் மாணவர்கள் அனைவரும் வெளியூர் அல்லது வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் அதிகபட்சம் ஒன்று முதல் இரண்டு வருடங்கள் மட்டுமே இங்கு தங்குகின்றனர். இதனால், அவர்கள் டெல்லியின் உரிமையாளர்களிடம் குரல் உயர்த்தி மோதிக்கொள்ள விரும்புவதில்லை. தற்போது, கீழ்பகுதியில் புகுந்த வெள்ளத்தில் சிக்கி பலியான உயிர்களுக்கு பிறகு, ஒவ்வொரு பிரச்சனைகளும் அரசு, பொதுமக்கள் கவனத்துக்கு வரத் துவங்கியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

2 days ago

மேலும்