இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கிராமம்

By செய்திப்பிரிவு

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு, மண்டி மற்றும் சிம்லா பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 60-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமேஜ் கிராமத்தைச் சேர்ந்த அனிதா தேவி கூறும்போது, “இரவில் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டதும் வீடே அதிர்ந்தது. வெளியில் எட்டிப் பார்த்தபோது கிராமமே வெள்ளத்தில் அடித்துச் சென்றது.

இதையடுத்து, உடனடியாக வீட்டிலிருந்து வெளியே வந்த நாங்கள் அருகில் உள்ள பகவதி காளி கோயிலில் தஞ்சமடைந்தோம். இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்தோம். எங்கள் வீடு மட்டுமே தப்பிப் பிழைத்தது. என் கண் முன்னே எங்கள் கிராமத்தில் இருந்த்த அனைத்து வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE