உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் போலீஸார் ஆய்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட நிலையில் உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம், சாபாத் ஹவுசின் பாதுக்காப்பினை காவல்துறை பலப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்தவர்களின் கூற்றுப்படி, தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள இரண்டு இஸ்ரேலிய கட்டிடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பினை உறுதி செய்வது குறித்து மூத்த அதிகாரிகள் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

ஏற்கெனவே அந்தப் பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த இரண்டு கட்டிடங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் ஆட்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, வியாழக்கிழமை குண்டு வெடிப்பு புரளி ஒன்றுக்கு எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்த டெல்லி போலீஸார் அது ஒரு போலியான எச்சரிக்கை என்று தெரிவித்திருந்தனர். பின்னர் அந்தப் பதிவு நீக்கப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில், டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே இரண்டு குறைந்த வீரியம் கொண்டு குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இந்த இரண்டு தாக்குதல்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதனிடையே, ஜுலை 31-ம் தேதி ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, அவருடைய பாதுகாவலருடன் வான்வழித்தாக்குல் மூலம் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் தெஹ்ரானில் உள்ள ஹனியேவின் வீட்டில் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இஸ்ரேல் - ஹமாஸ்களுக்கு இடையே போர் மூண்டதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE